ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தின கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தினம் இணைய வழியில் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு இக்கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் ஒன்று இணையவழியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பூர்ண சுந்தரி IAS கலந்து கொண்டு சிறப்பித்தார். மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் பேசுகையில், மாற்றுத்திறனாளியான நான் இச்சாதனையினைச் செய்ய நாட்டு நலப்பணித் திட்ட மாணவியாக இருந்ததே மிக முக்கியக் காரணம் என்று கூறியதோடு விவேகானந்தர், காமராசர், அப்துல்கலாம் ஆகியோரை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, சமூக பொறுப்புடன் செயல்பட்டால் தங்கள் வாழ்க்கையில் வரலாறு படைப்பதோடு, வலிமையான தேசத்தையும் அவர்களால் உருவாக்க முடியும் என்று உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் கூறினார்.

இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் & செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி, நாகராஜ் ஆகியோர் இந்நிகழ்வைச் ஏற்பாடு செய்திருந்தனர்.