தமிழகம் முழுவதும் ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

அடுத்த மாதம் 9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நிரந்தர கோரிக்கைகளை தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் நிறுத்தி வைத்துள்ளதாகவும், கொரோனா தொற்று தொடர்பாக மக்களோடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வரும், காவல் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மற்றும் டாஸ்மாக், ரேஷன் கடை ஊழியர்கள் என மக்களோடு தொடர்புடைய அரசு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், இழப்பீடு தொகையாக ரூபாய் 25 லட்சம் கிடைக்கும் வகையில் மருத்துவ குழு  காப்பீட்டு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் அஞ்சல் அட்டை இயக்கம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் எனவும், அடுத்த கட்டமாக அடுத்த மாதம் 9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.