கோவையில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவையில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்திருந்தது, சில தினங்களாக 500க்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் இன்று 485 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று சிங்காநல்லூர் பகுதியில் மட்டும் 40 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று பீளமேடு, ராமநாதபுரம், காந்திமாநகர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், குனியமுத்தூர், மதுக்கரை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 485 பேருக்கு கொரோனா உறுதியானது.

அதன்படி, கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 147ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் விவரம்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 437 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 193 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.