நவீனமயமாக்கலை விட சுற்றுச்சூழல் அம்சங்களில் அதிக கவனம் கொண்டுள்ளது

ஆலோசனைக் கூட்டதில் மாநகராட்சி ஆணையர்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 9 குளங்களை புணரமைத்து, நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக , பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள குறிச்சி குளத்தினை நொய்யல் நதியுடன் இணைப்பது முக்கிய நோக்கமாகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை அழகுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, புத்துணர்ச்சி மற்றும் குளத்தின் இயற்கை சுத்திகரிப்பு, நுழைவு வாயில், வடிகால் அமைப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, இந்த திட்டம் நவீனமயமாக்கலை விட சுற்றுச்சூழல் அம்சங்களில் அதிக கவனம் கொண்டுள்ளது. பொதுப்பணித்துறையின் குத்தகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி முழு தொட்டி நிலை திட்டத்தின் நிறைவில் குறைக்கப்படக் கூடாது. இதனால் குளத்தின் திறன் மாறாது இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் புத்துணர்ச்சி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படும் 9வது குளம் குறிச்சி குளமாகும். குளத்தின் மொத்த பரப்பளவு 334 ஏக்கர் ஆகும்.

குறிச்சி குளத்தின் கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் கரைகளை வலுப்படுத்தி அவற்றில் சைக்கிள் பாதை, பாதசாரிகள் நடைபாதை, ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள், படகு சவாரி, உணவகங்கள் , யோகா, கராத்தே, உடற்பயிற்சி கூடங்கள், கருப்பொருள் தோட்டங்கள், மிதக்கும் தளங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனித் தீவு போன்றவை அமையவுள்ளது.

மேலும், நகரமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக குளத்திற்கு உள்ளே வரும் நீரோடையின் பாதைகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே, குளத்தின் பாதுகாப்புக் குழுக்கள் மட்டுமே குளத்தினை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்தார்