உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்

துபாயில் செயல்பாட்டுக்கு வந்துள்ள உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்.

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய இந்த காவல் நிலையத்துக்கு ‘எஸ்.பி.எஸ்.’ (ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மக்கள் முழுமையாக  இந்த சேவையை பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் 2 போலீசாரும் அங்கிருந்து திரும்பப்பெறப்படுவார்கள்.

ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்களோ அதற்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் காத்திருப்பு அறையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.