விரைந்து சிஜிஎச்எஸ் மருந்தக சேவை துவக்கிட வலியுறுத்தல்

மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் சிஜிஎச்எஸ் மருந்தக சேவைக்கான மையத்தை கோவையில் விரைவில் துவக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் சிஜிஎச்எஸ் என்கிற மருந்தகம் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு  இதில் மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள், இன்னாள் எம்பிக்கள் இந்த மருந்தகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இச்சேவை மாநில தலைநகரங்களை மையப்படுத்தியே உள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த மருந்தகம் உள்ளது. இதன்காரணமாக கோவை உள்ளிட்ட பிற மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் இச்சேவையின் முழு பயனை அடையமுடியாமல் உள்ளது.  இதனையடுத்து கோவையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தக சேவையை துவக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தொடர் முயற்சியை மேற்கொண்டு வந்தேன்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மத்திய சுகாதாரத்துறைக்கு கொங்கு மண்டலத்திற்குட்பட்ட எம்பிக்கள் மற்றும் கேரள மாநில பாலக்காடு எம்.பி., உள்ளிட்ட ஏழு எம்பிக்கள்  கையெழுத்திட்டு மனு அனுப்பினோம். கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து மத்திய சுகாதாரத்துறையும் கோவை மற்றும் மதுரையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும் இதர எம்பிக்களின் சார்பிலும் வரவேற்கிறேன். விரைவில் சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.