மீண்டும் ஒரு புதிய நோய் – எச்சரிக்கும் சீன தூதரகம்

2020 உலகம் முழுவதும் ஒரு மரண பயம் கலந்த கருப்பு பிம்பத்தை உருவாகியுள்ளது. அது உண்மைதான் என்பதை நிருபிக்கும் விதமாக இந்த கொரோனா வைரசும் தனது அசுர வளர்ச்சியை காட்டி வருகிறது.

இதனை தடுக்க உலகம் முழுவதும் பலரும் பல விதமாக முயற்சி செய்வதை விட போராடி வருகிறார்கள். 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம்.

அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்டும் 628 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்போடு ஒப்பிடும்போது இந்த நிமோனியாவால் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் சீனா கவலை தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள சீனர்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனத் தூதரகத்தின் எச்சரிக்கையை உறுதி செய்யும் விதத்தில், புதிய தொற்று கொரோனாவை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக பரவி வருவதாக கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நிமோனியா என்ற பெயரிலேயே புதிய தொற்றை அந்நாட்டு அமைச்சகம் அழைக்கிறது. தலைநகர் நூர் சுல்தானில் நாள் ஒன்றுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 300 பேருக்கு பெயரிடப்படாத நிமோனியா தொற்று உறுதி செய்யப்படுவது.

ஏற்கெனவே கொரோனாவால் 53,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கெரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்நோக்கி உள்ள அந்நாட்டில் நிமோனியாவும் பரவுவது இரட்டைத் தாக்குதலாக அமையும் என அதிபர் Kassym-Jomart Tokayev கவலை தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது எந்த வகையான நிமோனியா என கஜகஸ்தான் அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனமும் இந்த புதிய தொற்று தொடர்பாக இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

தகவல் : news 18 tamil