மாற்று திறனாளிகளுக்கு ரூ1.69 லட்சம் மதிப்பிலான வாகனம் வழங்கிய எம்.பி. பி.ஆர்.நடராஜன்

கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது, சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவது என தொடர்ந்து இயங்கி வருகிறார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார். இதன்ஒருபகுதியாக 2020க்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 மாற்று திறனாளிகளுக்கு வழங்க மூன்று சக்கர வாகனத்திற்கான நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூ1.69 லட்சம் மதிப்பிலான வாகனம் வழங்கப்பட்டது.

காந்திபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.பி. பி.ஆர்.நடராஜன் பங்கேற்று பயனாளிகளான பாலன், பிரபு, தங்கவேல் ஆகியோருக்கு வாகனத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.