மீண்டும் செயல்பட துவங்கிய நேரு விளையாட்டு அரங்கம்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கத்தில் இரண்டு மாதத்திற்கு பின் வீரர், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டு பயிற்சிகளை மீண்டும் துவங்கினர்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவையின் முக்கிய விளையாட்டு பயிற்சி மையமான நேரு விளையாட்டு அரங்கம் மூடப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு பின் நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியது.

அதிகாலையிலேயே வந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் வழங்கமான பயிற்சிகளை நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கினர். குறிப்பாக கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, குத்துச்சண்டை போன்ற பயிற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட கோவை நேரு விளையாட்டு அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என்கின்ற நம்பிக்கை பிறந்துள்ளது.