குழாயை தொடாமல் கைகளை கழுவ தானியங்கி அமைப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்க்கொண்டுவரும் இவ்வேளையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மக்கள் நுழையும் முன் சோப்பு கொண்டு கைகளை கழுவுவது அல்லது கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புழக்கத்திலுள்ள கைகழுவும் தொட்டிகளில் உள்ள குழாயை ஒவ்வொரு நபரும் தொட்டு தண்ணீரை திறந்தும் சோப்பு கொண்டு கைகளை கழுவும் வகையில் உள்ளது.

இந்த முறையில் ஒவ்வொருவரும் குழாயை தொடுவதும் வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணியாக அமைந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு சென்சாரால் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு மற்றும் கிருமிநாசினி/சோப்பு கரைசல் திரவம் வெளியேற்றும் கருவியை கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டல மைய விஞ்ஞானிகள் எஸ்.சையது, செந்தில்குமார் ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.

இவ்வமைப்பானது தண்ணீர் தொட்டி பேட்டரியால் இயங்கக்கூடிய பம்பு வேக கட்டுப்பாட்டு அமைப்பு, பேட்டரி, சென்சாரால் இயங்கக்கூடிய சோப்பு கரைசல் வெளியேற்றும் கலன் மற்றும் தண்ணீர் குழாய் ஆகிய பாகங்களை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் பொருத்தப்பட்டுள்ள சோப்பு கரைசல் வெளியேற்றும் கலனுக்கு அருகில் கையை கொண்டுசெல்லும்பொழுது அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரால் உணரப்பட்டு சோப்பு கரைசல் வெளியேற்றும் பம்பு இயக்கம் பெற்று தேவையான அளவு சோப்பு கரைசலை வெளியேற்றும். பின் கைகளை சோப்பு கரைசலை கொண்டு நன்கு தேய்த்த பின் தண்ணீர் குழாய்க்கு அருகில் கொண்டு செல்லும்பொழுது குழாய் அருகில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரால் உணரப்பட்டு தண்ணீர் வெளியேறும். கைகளை கழுவிய பின் கைகளை குழாயைவிட்டு வெளியே எடுத்தவுடன் பம்பு இயக்கம் நிறுத்தப்பட்டு தண்ணீர் நின்றுவிடும். இதன்மூலம் தண்ணீர் செலவு சிக்கனப்படுத்தப்படுவதுடன் கைகளால் குழாயை தொடமலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்வமைப்பின் விலை 10,000 ரூபாய் ஆகிறது. இவ்வமைப்பின் விலை ரூ.10.000 ஆகும்.