‘பாசிட்டிவ்’வாக இருங்கள்

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் (நேர்மறை அலைகள்) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்களும் எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். பொதுவாக எப்போதுமே “தெரியாது’, “நடக்காது’, “முடியாது’ , “கிடைக்காது’ என சொல்லாதீர்கள்.. அப்படி சொல்பவர்களையும் உங்களிடம் இருந்து தூரமாக விரட்டி விடுங்கள்.

உற்சாகமாக இருங்கள்
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க இருக்கும் வேலையை செய்யுங்கள். அது இந்த வேலை, அந்த வேலை என்றில்லாமல் எந்த வேலையாக இருந்தாலும் அதை உற்சாகமாக செய்யப் பழகுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்யாமல், இந்த வேலையை நம்மைவிட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
தற்போது வேலையே இல்லையே என்று வருத்தப்படாதீர்கள். வேலை வரும்போது நீங்கள் தெம்பாக இருக்க வேண்டும் இல்லையா.. அதற்காகவாவது இப்போது உற்சாகமாக இருங்கள். நடப்பது நடந்தே தீரும். உங்களால் எதையும் மாற்ற முடியாதுதான்.. அதை சொல்லி உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள், வீழ்த்தி விடாதீர்கள்.

பவர்ஃபுல்லாக உணருங்கள்
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மன வலிமை மிக முக்கியம். உங்களைப்போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ். அதுவும் இப்போது சாதித்து விட்டீர்கள் என்றால் நீங்களே ராஜா.
நேசியுங்கள் உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.
உங்களைப்போல அழகானவர் யாரும் இல்லை, உங்களைப்போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பயணப்படுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்துவிடக் கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைத்தே தீரும். உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும். நீங்கள் கழுகுடன் வானில் உயர பறக்க நினைத்தால், வாத்துகளுடன் நீந்திக் கொண்டிருக்கக் கூடாது.
இதுவும் கடந்து போகும். அப்போது நீங்கள்தான் உங்களுடன் பயணப்பட வேண்டும். அதற்காக இப்போது உங்களை நிலைநிறுத்துங்கள்.

பூந்தமிழன்