மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் – வருமானவரித்துறை

டெல்லி: மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஆதாரை பான்கார்டுடன் இணைத்தால் மீண்டும் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன.

ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். ஆதார் கார்டு அடிப்படையில் இது வழங்கப்படும்.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை பயன்படுத்தி விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பின்னர் புதிய இ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள்தான் பான் கார்டிலும் இடம்பெறும்.

Source : Dhinakaran