படுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்து வைக்க வேண்டும், ஏன்?

படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும்போது, படுக்கையை 10 பேர் மிதித்துக் கொண்டு போவார்கள். இந்த நிலையில், அதே படுக்கையில் அவர் அன்றிரவு படுப்பது, நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் நல்லதில்லை.

காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கையையும் போர்வையையும் மடித்து வைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எதற்காக அப்படிச் சொல்கிறார்கள்?

சத்குரு:

அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை எஞ்சியிருக்கும். காட்டு விலங்குகளுக்குக்கூட இதை உணரும் சக்தி நன்கு இருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் சென்றுவிட்டாலும், அங்கு வரும் விலங்குகள், இங்கு ஒரு மனிதன் சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்கின்றன. இதை வாசனை மூலம் மட்டும் அவை அறியவில்லை. அங்கிருக்கும் அதிர்வுகளை வைத்தும் அவை தெரிந்து கொள்கின்றன. சூட்சுமமாக இருக்கும் ஒரு மனிதன்கூட இப்படி அறிந்து கொள்ள முடியும்.

எனவே படுக்கையில் ஒருவர் தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம் தொடர்ந்து இருப்பதால், படுக்கையிலிருந்து எழுந்த பின்னரும், அவருடைய ஒளி உடலின் தன்மை அந்தப் படுக்கையில் இருக்கும். படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும்போது, படுக்கையை 10 பேர் மிதித்துக் கொண்டு போவார்கள். இந்த நிலையில், அதே படுக்கையில் அவர் அன்றிரவு படுப்பது, நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் நல்லதில்லை. மேலும் அவருடைய உடலும், அந்தப் படுக்கைக்கு, அந்த சூழ்நிலையில், அவ்வளவு எளிதில் ஒத்துப்போகாது.

இன்னொரு உதாரணம் மூலமும் இதை விளக்க முடியும். நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறீர்கள். எல்லாம் வசதியாகவே இருக்கின்றன. நீங்களும் களைப்பாகத்தான் இருப்பீர்கள். இருந்தாலும் படுத்தால் தூக்கம் வராது. ஏனெனில் உங்கள் ஒளி உடலுக்கு அங்கிருக்கும் தன்மையுடன் ஒத்து வரவில்லையென்றால் உங்கள் உடல் அங்கு சுகமாகவே இருக்காது. தேவையற்ற கனவுகளும் தோன்றி  உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வாய்ப்புண்டு.

ஆனால் படுக்கையைச் சுருட்டி வைத்து உபயோகிக்கும்போது, உங்கள் படுக்கையின் தன்மை மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதால், படுத்தவுடனேயே உங்கள் உடல் படுக்கையில் ஒத்துப்போகும். உடல், மனம் இரண்டுமே பாதிப்பின்றி சுகமாக இருக்கும். ஒருவர் உடுத்திய உடையை இன்னொருவர் உடுத்தக்கூடாது, ஒருவர் படுக்கையை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்பதெல்லாம் இதன் அடிப்படையில்தான்.

இப்போது பல வீடுகளிலும் படுக்கையறை வந்துவிட்டது. அனைவரும் கட்டிலில் கனமான மெத்தை போட்டுப் படுக்கப் பழகி வருகிறார்கள். அந்த மெத்தையையும் சுற்றி வைத்தால் நல்லது. அப்படி அந்த கனமான மெத்தையைச் சுற்றி வைக்க முடியவில்லை என்றாலும் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு துணி போட்டு மூடிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.