தங்கம் என்பது ஒரு சாதாரண உலோகம் மட்டுமல்ல; அது இந்தியர்களின் வாழ்க்கைமுறையோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்வாகவே கருதப்படுகிறது. செல்வத்தின் அடையாளம், பாதுகாப்பான முதலீடு, பாரம்பரியம், கலாசாரம் என தங்கம் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் சீனாவுக்குப் பிறகு அதிக தங்க நுகர்வை மேற்கொள்ளும் நாடாக இந்தியா திகழ்கிறது. “வீட்டில் குறைந்தபட்சம் ஒரு குண்டுமணி தங்கம் இருந்தே ஆக வேண்டும்” என்ற எண்ணம் பல தலைமுறைகளாக இந்தியர்களின் மனதில் பதிந்திருக்கிறது. திருமணம், பண்டிகை, பிறந்தநாள், விசேஷங்கள் என எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் தங்கம் வாங்குவது ஒரு பாரம்பரியமாகவே உள்ளது.

தங்க உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், பெரும்பாலான தேவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்தாலும், அதற்கான மக்களின் விருப்பம் எப்போதும் குறையவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த அறிக்கையின் படி, இந்திய குடும்பங்களில் மொத்தமாக சுமார் 34,600 டன் தங்கம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆபரணங்கள், நாணயங்கள் அல்லது கட்டிகளாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி, இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 337 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தங்க இருப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் 88.8 சதவீதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. அதைவிட ஆச்சரியமானது என்னவென்றால் இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளையும் கடந்து செல்கிறது என்பதுதான்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இதே கவுன்சில் அறிக்கையில், இந்திய குடும்பங்களில் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 9,600 டன் வரை தங்க இருப்பு உயர்ந்துள்ளது.