ஆசிய மற்றும் ஆப்ரிக்க விஞ்ஞானிகளுக்கு வேளாண்காடுகள் பயிற்சி

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு விஞ்ஞானிகளுக்கு 5 நாள் பயிற்சி முகாம் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்களாதேஷ், போட்ஸ்வானா, கம்போடியா, மியான்மர், மாலாவி, டான்சானியா, கென்யா, உகாண்டா, நேபால் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து 26 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் வேளாண் காடுகள் சார்ந்த மரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட சந்தைப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளின் வணிகம் சார்ந்த அமைப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்தது.

கன்றக இனப்பெருக்க முறை பற்றியும், எரிகட்டி தயாரித்தல் பற்றியும் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் களப்பயிற்சியாக வேளாண் காடுகளின் மாதிரி பண்ணைகள் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளுக்கான ஒட்டுப்பலகை தயாரித்தல், தீப்பெட்டி தொழிற்சாலை, எரிகட்டி தொழிற்சாலை மற்றும் மரக்கட்டை தொழிற்சாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இப்பயிற்சியின் நிறைவு விழா வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் அவர்கள் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி சான்றிதழ்களை வழங்கினார். சர்வதேச வேளாண் காடுகள் மையத்தை சார்ந்த எஸ்.கே.தியானி இவ்விழாவில் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சியினை கல்லூரி முதல்வர் சுரேஷ், வேளாண்காடுகள் துறையின் தலைவர் பார்த்திபன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இப்பயிற்சியின் மூலம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு வகையான வேளாண் காடுகள் தொழில்நுட்பங்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு அந்நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வழிவகை செய்யும்.