இருகூரில் கோமாரி தடுப்பூசி முகாம்

இருகூர் பேரூராட்சி, குளத்தூரில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கு கோமாரி (கால் மற்றும் வாய் நோய்) நோயினை கட்டுப்படுத்திட 17-வது சுற்று தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை அடங்கிய 1 கிலோ பாக்கெட்களை கால்நடை வளர்ப்போர்களுக்கு வழங்கினார்.

இவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் ‘தேசிய கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசித்திட்டத்தின்” கீழ் 2019 ஆம் ஆண்டு 21 நாட்களுக்கு பதினேழாவது சுற்று தடுப்பூசிப் பணி தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்கிளலும் உள்ள 93.7 லட்சம் எண்ணிக்கை பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்படவுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்நோய்க்கான ஊநீர் அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், இத்தடுப்பூசிப் பணிக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக்குழுவினார் மூலம் குளிர் சங்கிலி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு, அவ்வினத்திற்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.  இதன் மூலம் 100% தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். கால்நடைகளை கால் மற்றும் வாய் (கோமாரி) நோயின் தாக்குதலிருந்து காப்பாற்ற இத்தடுப்பூசி போடப்படுகிறது. இதன்மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளிலிருந்து மாடுகள் பாதுகாக்கப்படுகிறது.

மேலும்,இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.  மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போம் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட இடத்தில் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொண்டு கால்நடைகளை கோமாரி நோய் பாதிக்கப்படாமால் வளர்த்து பயனடைய வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அவர்கள் தொரிவித்தார்.