சில ஆண்டுகளில் மூழ்க தொடங்கும் இந்தியா!

சில ஆண்டுகளில் மூழ்க தொடங்கும் இந்தியா! ஆய்வின் அதிர்ச்சி தகவல்

கடந்த சில ஆண்டுகளாக தமிழக மற்றுமல்லாமல் இந்திய முழுவதும் வெயிலின் தாக்கமும், மழையின் அளவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையின் அளவு அதிகரித்து அங்குள்ள சில கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதை போன்று அடுத்தடுத்த ஆண்டுகளில் மழையின் அளவு காரணமாக இந்தியா மூழ்க தொடங்கும் என்று ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில், இந்த ஆண்டு பருவ மழைக்காலத்தில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஆகியவை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டு பல உயிர்களை பறிகொடுத்தன.

பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நின்றனர். இதனை ஆண்டுகளாக மழை பெய்து கொண்டு தான் இருந்தது. இருபினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட இந்திய வானிலை மாற்றங்கள் குறித்தான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது. இப்படி பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால் தான், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது என்றும், இதன் காரணமாக அதிக மழை பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளங்களை தடுக்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒன்றரை டிகிரி செல்கியஸ்க்குள் பூமி வெப்பமடைவது நிறுத்தப்பட்டால் மட்டுமே, ஏற்படவிருக்கும் வெள்ள பாதிப்பில் பாதியையாவது குறைக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். சமீபத்திய தகவலில் உலகில் உள்ள பனி பாறைகள் வெகு வேகமாக உருகி வருகிறது என்றும், இதுவரை பனி படர்ந்து இருந்த இடங்களில் தற்பொழுது நீர் ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 1905 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை உள்ள மழைப்பொழிவு விவரங்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, மிதமான மழைப்பெய்யும் நாட்களை விட, மிக அதிக கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிகமான கன மழை, வரட்சி ஆகியவையே குறிப்பாக தென்னிந்தியா விரைவில் சந்திக்கவிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் இந்தியாவில் வெப்ப நிலை மாற்றங்கள்  அதிகம் என்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, வலுவிழக்கும் பருவ மழைக்காலமும், அதிகரிக்கும் கன மழை நாட்களும் தென் இந்தியாவில் வரட்சியை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகள் கேரளாவில் நடந்ததோ அது தான் இனி தென்னிந்தியாவின் வழக்கமான காட்சியாக இனி வரும் ஆண்டுகளில் மாறப்போகிறது. இதனை தடுக்க இந்தியா விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

புவி வெப்பமடைவதை உடனடியாக குறைப்பது என்பது நடக்காத காரியம். ஆனால் புவி வெப்பமடைவதால் பெய்யக்கூடிய மிக கன மழையை சரியான முறையில் சேமித்தால், வெள்ள அபாயத்தில் இருந்து தென் இந்தியா காக்கப்படும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.