மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வாக்குறுதி அற்புதம்

 –  அமைச்சா் துரைமுருகன்

தமிழக நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டப்பேரவை குழு தலைவா்கள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து ‘மேகதாது அணை’ கட்ட அனுமதிக்க கூடாது என்று விளக்கி கூறினார். அதன் பின்னர், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் ஜூன்22 அன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து திரும்பிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் துறைமுருகன்  கூறியதாவது, “மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சட்டப்பேரவை கட்சி குழு தலைவர்கள் அனைவரும் சந்தித்தோம். தற்போது மேகதாது என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காவிரிக்கும் தமிழ்நாட்டுக்கும் 1968 ம் ஆண்டு தொடங்கி நீண்டகாலம் தீர்ப்பாயம் முன் நடந்தது.

அதன் பின்னர், பல வருடங்களாக வழக்கு நடந்தது. ஒரு நாள் கூட மேகதாது என்ற வார்த்தையை கர்நாடகம் உச்சரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் சென்றோம். அங்கேயும் மேகதாது என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்கவில்லை.

ஆனால், நீதிமன்றம் என்ன சொன்னதென்றால் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை நியமித்து யாருக்கும் எந்த குறையில்லாமல் நாங்கள் கொடுத்திருக்கிற தீர்ப்பை நீங்கள் அமல்படுத்த வேண்டும். அது தான் உங்களுக்கு தரப்பட்ட அதிகாரம் என்று சொல்லியது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கர்நாடகா மேகதாதுவை பற்றி நாங்கள் பேசுவோம் என்று சொன்னது. அப்படி பேசுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என, நாங்கள் திருப்பித் திருப்பி கிட்டத்தட்ட 15 முறை சொன்னோம். உடனே அதை கேட்டுக்கொண்டு சரி என, விட்டு விட்டார்கள்.

தற்போது, வழக்கறிஞர் ஒப்பீனியன் வாங்கி வந்து மேகதாது பற்றி பேசுவதற்கு உரிமை உண்டு என, கூறுகிறார்கள். காவிரி ஆணையத்தை நியமித்தது உச்ச நீதிமன்றம். அந்த மன்றம் அதற்கான அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. காவிரி ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். இந்த அதிகாரம் வேண்டும் என்று கேட்டு இருக்க வேண்டும். வழக்கறிஞரிடம் ஒப்பீனியன் வாங்கி கொண்டு பேசுவது தவறு என்பதை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

மேகதாது எங்கே கட்டுகிறார்கள் என்றால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே வடியும் தண்ணீர் நமக்கு சொந்தம். கபினியில் இருந்து கீழே வழியும் தண்ணீரும் சொந்தம். அதன் பின், தண்ணீர் மட்டும் இல்லாமல் இயற்கையாக பொழியும் மழை தமிழ் நாட்டுக்கு சொந்தம்.

நமக்குரிய இடத்தில் அணை கட்டுவது உரிமை மீறல் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். ஜூலை 6, 7 ம் தேதி கமிட்டி கூட்டம் நடக்கிறது. அப்போது, உங்கள் எதிர்ப்பு குறித்து பேசுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணை கட்ட முடியாது என்ற அற்புதமான வாக்குறுதியை கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.