மைசூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

8 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி யோகாசனங்களை மேற்கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஒட்டு மொத்த உலகமும் நமது உடல் மற்றும் ஆன்மாவில் இருந்து தான் தொடங்குகிறது. யோகா உலகளவில் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது. யோகா இந்த உலகின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. சமூகத்திற்கு அமைதியை கொண்டு வருவதோடு, நமக்குள் இருக்கும் அனைத்தையும் யோகா நமக்கு உணர்த்துகிறது.

யோகா வாழ்க்கையின் ஒரு அங்கமாக மட்டுமின்றி, வாழ்க்கை நெறிமுறையாக மாறி இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே அனைவரும் யோகாவை அறிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து யோகாசனங்களை செய்தார்.