ஆற்காடு வீராசாமி  உயிருடன் இல்லை;  பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக, பாஜக  தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய  பாஜக தலைவர் அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை சொல்வதற்கு முன்பு , “ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்போது இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்” என பேசியிருந்தார்.

ஆற்காடு வீராசாமி உயிருடன் உள்ள நிலையில், அண்ணாமலை பேசியதால் திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. பாஜகவைச் சேர்ந்த பலரும் அண்ணாமலை பேச்சின் உண்மை தன்மையை  அறியாமல் அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்தனர்.

ஆற்காடு வீராசாமி குறித்து தவறான தகவல் பரப்பப்பட்ட நிலையில் அவரது மகன் கலாநிதி வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

கலாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், “தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்” என்று பதிவிட்டார்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை  ட்வீட்டர் பதிவில்,  “Dr.உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.