வந்தாச்சு விலங்குகளுக்கு தடுப்பூசி

கொரோனா வைரஸ் கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தப்பிக்க பல தடுப்பூசிகள் மனிதர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டு அதை செலுத்தியும் வருகின்றன.

மனிதர்களுக்கு பாதித்த கொரோனா தொற்று, தற்போது விலங்குகளுக்கும் பரவாமல் தடுக்க  அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், விலங்குகளுக்காக இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது, விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்புகளால், இறக்குமதி செய்வதை விட, சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது.  இது உண்மையில் ஒரு பெரிய சாதனை என்றும் மந்திரி தோமர் கூறினார்.