ஆர்.வி.கலை கல்லூரியில் ஆண்டு விழா

டாக்டர்.ஆர்.வி.கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார்.

கோவை, இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: எந்த ஒரு செயலும் வெற்றி பெற ஈடுபாடு அவசியம். அந்த செயலை செய்வதற்கு முன்னால் நூறு முறை யோசனை செய்ய வேண்டும். முடிவு செய்த பின்னால் அதில் இருந்து பின் வாங்கக் கூடாது. எதிர்காலம் சிறப்பாக அமைய நல்லதொரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வளமாகும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது: உயர்ந்த எண்ணம், விடா முயற்சி, அயராத உழைப்பு, துணிவு, தன்னம்பிக்கை இவை வெற்றியின் அடையாளங்கள். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், இவையாவினும் புண்ணியமான செயல் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல், பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்று பாரதியின் வைர வரிகளை நினைவு கூர்ந்தார்.

பின்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்‌.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ.பள்ளியின் செயலர் ஜெயக்கண்ணன், முதல்வர் லூசி தங்கராணி, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்‌.