ஆட்சிதான் மாறியது எந்தக் காட்சியும் மாறவில்லை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  சாய்பாபா காலனி பகுதியில் தேமுதிக அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்துக்கு முக்கிய காரணம் கனரக வாகனங்கள் என  தெரிவித்தார். இங்கே  குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் மாநகர பகுதியில் இயங்குவதால், இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளதே தவிர, எந்தக் காட்சிகளும் மாறவில்லை. ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விசாராணைக் கைதிகளை கொல்லும் நிலையும்  உள்ளது.

இங்கு தெருவுக்கு தெரு 10 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொலுசு, பணம் அளித்ததை தவிர வேறென்ன செய்தார் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும். சாலை வசதி, சாக்கடை வசதி என எதுவும் இங்கு சரியில்லை. மக்கள் தெளிவானால் தான் எல்லாமே இங்கு மாறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.