கோவையில் 5 மையங்களில் டான்செட் தேர்வு

முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு கோவை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 5 மையங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று டான்செட் நுழைவு தேர்வுகள் நடைபெறும் நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, மருதமலை சாலையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பீளமேடு பகுதியிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் உள்ளிட்ட 5 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் எம்பிஏ பிரிவுக்காக 2921 பேர், எம்சிஏ பிரிவிற்காக 788 பேர், எம்.இ மற்றும் எம்.டெக் ஆகிய பிரிவிற்காக 693 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 396 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை எம்சிஏ பிரிவுகளுக்கான தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ பிரிவுகளுக்கான தேர்வும், நாளை காலை 10 மணி முதல் 12 மணிவரை எம்.இ மற்றும் எம்.டெக் பிரிவுகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.