ஏஜிஎஸ் ஹெல்த் கேரின் முதலாமாண்டு விழா : முன்களப்பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கோவை சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ஏஜிஎஸ் ஹெல்த் கேரின் முதலாமாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்துார் பிரஸ் கிளப் உடன் இணைந்து முன்கள பணியாளர்களில் ஒருவர்களான பத்திரிக்கையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் துவக்கி வைத்தார்.

2021ல் டாக்டர் ஆதித்யன் குகன் இயக்கத்தில் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் ஏஜிஎஸ் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குனர் ஆதித்யன் குகன் கூறியதாவது: கொரோனா தொற்று காலத்தில் 1500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வீ்ட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துள்ளோம். கொரோனா தொற்றுக்குப்பின், 35 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதில் 10 சதவீதம் பேருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் ஏற்படுவதை அறிந்துள்ளோம். இந்த கடினமான நிலையை தவிர்க்க ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 7 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டோம். ஒவ்வொரு நாளும் 50 பேருக்கு முன்பதிவு செய்து, வாரம் முழுவதும் 300 பேருக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை செய்யப்பட்ட 300 பேரில், 180 பேருக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 180 பேரில் 120 பேர் இளம் வயதினர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேசமயம், இவர்களி்ல் பலர் ரத்த அழுத்தம், சர்க்கரையால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இது அவர்களின் குடும்பபொருளாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.

ஆகையால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முறையான சிகிச்சை அளிக்க முடியும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய சிபாரிசு செய்கிறோம். எந்த நோயையும் வருமுன் காப்பது சிறப்பானது. மேலும், முழு உடல் பரிசோதனை மட்டுமின்றி, ஒவ்வொருவரும் உணவு முறைகள், உடல் பயிற்சி போன்ற ஆரோகிய வாழ்க்கை முறையும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை நீண்ட நாட்களுக்கு தள்ளிப்போட முடியும். என அவர் தெரிவித்தார். இறுதியில் தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் டாக்டர் ஜனனி ஆதித்யன் நன்றி தெரிவித்தார்.