ஓராண்டில் ஸ்டாலின் அரசின் சரித்திர சாதனைகள்

ஐம்பது ஆண்டுகள் அரசியலில் இருந்தாலும் 2021 மே மாதத்தில் தான் தமிழக முதல்வராகும் வாய்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது. அவ்வாறு முதல்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஓராண்டில் பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்.

முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்:

முதல்வராக பதவியேற்கும் முன்பே கொரோனாவைக் கையாள ‘கட்டளை மையம்’ உருவாக்கி தனது  ஆளுமையை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு, குடும்பத்துக்கு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள் தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் ரூ. 4,000 கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டபடி ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது,  பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் ஆகியவை பதவியேற்ற அடுத்த நொடியிலேயே அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாதபடி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பி.பி.இ கிட் அணிந்து நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஸ்டாலினின் செயல், நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் செலவீனங்கள் பற்றி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இது அரசு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி செயல்படுகிறது என்பதை காட்டியது.

முத்தான சாதனைகள்:

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்தது, மக்களின் குறைகளைப் போக்க ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ தனித்துறையை உருவாக்கி லட்சக்கணக்கான மனுக்களுக்குத் தீர்வுகண்டது, பெண் காவலர்களின் நலன் கருதி நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்தது, மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுத்தது,  தமிழ் இலக்கியத்திற்கு வலு சேர்க்கும் படைப்புக்களைத் தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் அமைக்க உத்தரவிட்டது, சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் திட்டம் உள்ளிட்டவை இந்த ஓராண்டில் முத்தான சாதனைகள்.

நீட் வாக்குறுதி:

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  நீட் தேர்வை ரத்து செய்வதில் திமுக அரசின் முனைப்பை இது வெளிப்படுத்துகிறது.

சிறந்த நடவடிக்கைகள்:

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதியப் பலன்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்தது, இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதித்தது, டெல்டா விவசாயிகளுக்கு ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம், மின்துறை சம்பந்தப்பட்ட புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம், 50,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான மகப்பேறு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ஸ்டாலின் அரசின் மெச்சத் தகுந்த நடவடிக்கைகள் ஆகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயப் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை வர வைத்து லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது, அரபு நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து வந்தது தமிழக தொழில் வளர்ச்சிக்குரிய நடவடிக்கைகள் ஆகும்.

மக்கள் வரவேற்பு:

தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ புதிய விருது வழங்கும் திட்டம்,  இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ புதிய திட்டம்,  தமிழர்கள் வழிபடும் தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டம்,  தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது, மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கியது,  சமூகநீதிக் காவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாளை சமூக நீதி நாளாக அறிவித்தது, அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது, அதோடு, சமூகநீதி அளவுகோல் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தது உள்ளிட்டவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

கல்வெட்டில் பொறிக்க வேண்டிய சாதனைகள்:

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது,  இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது,  மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக 225 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிப்பு,  தமிழகம் முழுவதும் ரூ.625 கோடியில் 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது, இரண்டு பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையைப் பாராட்டி ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, சாதியெதிர்ப்புப் போராளி பண்டிதர் அயோத்திதாசரின் 175 வது ஆண்டு விழா நினைவாக வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது ஆண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்ததோடு, கோவையில் வ.உ.சி க்குச் சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டது முதல்வர் ஸ்டாலின் அரசின் ஓராண்டு கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகள்.

 சொன்னதை செய்த அரசு:

அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கான தரவு மையம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்று ஓராண்டில் இத்துணை செயல்பாடுகளைச் செய்து முடித்துள்ளது திமுக அரசு. சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியில் இருந்து, சொன்னதைச் செய்து காட்டும் செயல் வீரனின் ஆட்சிக்கு வந்துள்ளது தமிழ்நாடு.