143 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்கிறது – மத்திய அரசு திட்டம்

2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55 சதவிகிதம் ஆக உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சரக்கு – சேவை வரியை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்கீழ் 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது.

சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10 சதவிகிதம் வரை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் உணவு சார்ந்த சில பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.

143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி கவுன்சில் பரிசீலனை செய்து உள்ளது. தற்போது 18% ஜி.எஸ்.டி விகிதாசாரத்தில் உள்ள 92% பொருள்களை 28% விகிதாசாரத்தில் மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அதனால் சில அத்தியாவசியப் பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2017 மட்டும் 2018 ஆகிய ஆண்டுகளில் வரி குறைப்பு செய்யப்பட்ட பொருட்களுக்கு தற்போது வரியை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகின்றது.

அதன்படி அப்பளம், வெல்லம், சாக்லேட், வால்நட் கஸ்டர்டு பவுடர், சுவிங்கம், மது சாராத பானங்கள், வாஷ்பேசின், செராமிக்ஸ் சிங்க், கண்ணாடி, ஆடைகள், லெதர் உப பொருள்கள், சூட்கேஸ்,கலர் டிவி மற்றும் பவர் பேங்க் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பர்ஃப்யூம், வாட்ச், சாக்லேட், வெதர் ஆடைகள், ஷாப்பிங் பேக், ஹேண்ட் பேக், பிளைவுட், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.