‘இசைஞானி’ மூலம் வாக்கு அரசியலா?

பிரபல இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா, அரசியல் சட்டமேதை அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுப் பேசியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளையும், விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறது.

இளையராஜாவின் முன்னுரை:

புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டிருந்த மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்தில் இசைஞானி இளையராஜா எழுதியிருந்த முன்னுரையில், “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தால் நினைவுகூரப்படும் ஒரு மாபெரும் மனிதர். அவருடைய பணியின் மகத்துவம், நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெற விரும்பும் பலருக்கு அவர் ஓர் உத்வேகம். சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில் பெருமை பெறுகின்றனர். ஆனால் விரைவில் மறக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தாங்கள் வாழும் காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, பிற்காலத்தில் அவர்களுக்கு பொருத்தப்பாடு ஏற்படும்.

ஆனால், ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ ஒரு அரிய தலைவர், அவர் தனது காலத்திலேயே சரித்திரம் படைத்தார், அவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது வாழ்க்கை பரவலாக வாசிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ‘டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நீர் மற்றும் ஆற்று வழிப்பாதை கொள்கையின் சிற்பி’ என்று குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016 இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது.

இருப்பினும், ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது யோசனைகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.

தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில், சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.

சமூக நீதி என்று வரும்போது, பல சட்டங்கள், அரசமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள். வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகியவற்றின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோடியின் அரசு எடுத்ததாக செய்திகளில் படித்தேன். பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடருவதற்கான சுதந்திரம் அளிக்கும் நடவடிக்கை இது. பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும் நினைவுக்கு வருகின்றன.

பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ இயக்கத்தின் மூலமாக மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார். அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்,” என்று அந்த முன்னுரையில் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ராஜாவின் கருத்து:

பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமூகநீதி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மோடி எடுத்துவருகிறார். முஸ்லீம் பெண்களின் வாழ்வில் முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாகப் பிரதமர் பெரும் மாற்றத்தைச் செய்திருக்கிறார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்த ஒப்பீட்டுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக பல பதிவுகள் பகிரப்பட்டன. இதையடுத்து தமிழக பா.ஜ.க சார்பில், உண்மையைப் பேசத் தயங்கும் தமிழகத்தில், மனதில் பட்ட உண்மையை அப்படியே பேசியிருக்கிறார் இசைஞானி இளையராஜா என்று அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிடப்பட்டது.

ராஜாவும், ரஹ்மானும்

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை அடுத்து தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ வை சுமந்தபடி இருக்கும் ‘தமிழணங்கு’ படம் ஒன்றை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரபல இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான். ‘‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரியையும் அந்த படத்தில் குறிப்பிட்டிருந்தார் ரஹ்மான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது தமிழ்தான் இந்தியாவின் இணைப்புமொழி என்றும் ரஹ்மான் கூறியிருந்தார்.

இவையெல்லாம் அமித்ஷாவின் இந்தி ஆதரவுக் கருத்துக்கான ரஹ்மானின் துணிச்சலான எதிர்வினை என பலரும் வருணித்தனர். இது குறித்து பரபரப்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் சமூக ஊடகத்தில் பரவலான பாராட்டுகளும், ஒரு சிலரின் விமர்சனங்களும் வெளியாயின.

இந்நிலையில்தான் தமிழின் மூத்த இசையமைப்பாளரும் இசைஞானி என்று கொண்டாடப்படுகிறவருமான இளையராஜா நரேந்திர மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு எழுதியுள்ள இந்த முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

அரசியல் ஆதாயமா?

இளையராஜாவின் கருத்து குறித்து அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த விஷயம் குறித்து நான் இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எதிராக விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. சொல்லப்போனால் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பா.ஜ.கவிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைப் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால், இருவர் குறித்து ஆராய்ந்து நான் முன்னுரையில் எழுதியிருந்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதை மோடி செய்து வருகிறார், என்று என்னிடம் கூறினார்’  என்றிருக்கிறார்.

இந்த நிலையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவின் கருத்து ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால், இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா? இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகக் கோலோச்சி வரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டு வருவதாகவும், இந்த விழாவை ஒரு அரசு விழா போல நடத்த வேண்டுமென பா.ஜ.க தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் கங்கை அமரன் சமீபத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்தார்.

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களிடையே பா.ஜ.கவுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. எனவே, இந்த விழாவின் மூலம் இளையராஜாவின் சமூக வாக்குகளை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது கட்சி மேலிடத்தின் திட்டமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

காய் நகர்த்தும் பா.ஜ.க.

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இடையே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரிய அளவில் அதிகாரம் செலுத்தி வருவதால் கட்சியை வளர்ப்பதற்கு தலித் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதை பாஜக தலைமை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பெயர் மாற்றம் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் மத்தியில் பாஜக நன்றாகவே ஊடுருவியுள்ளது, அதேபோல அருந்ததியர் சமுதாயத்திலும் எல்.முருகனை மாநிலத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கியது மூலம் வரவேற்பை பெற்றுள்ளது பாஜக.

இப்படிப்பட்ட சூழலில் 13% எண்ணிக்கை கொண்ட பறையர் சமூகத்திற்குள் ஊடுருவ வேண்டும் என கணக்குப் போடுகிறது பாஜக. இதன் வெளிப்பாடாகவே இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த சமூகத்தின் வாக்குகளை அதிகரிக்க தற்போது பாஜக காய் நகர்த்தி வருகிறது. இதன் காரணமாக கூட, முதல்வர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என கூறியதாக திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கலாம்.

அம்பேத்கரை ஒரு ஜாதிய தலைவனாக பார்க்காமல் உலக மேதையாக போற்றுகிறார் பிரதமர் மோடி, அதன் காரணமாகவே நான் பிரதமராவதற்கு அம்பேத்கர் தான் காரணம் என மோடி கூறினார்.

தற்போது, இளையராஜா போன்ற ஒருவர் இதுபோன்ற ஒரு கருத்தை கூறியிருப்பது தமிழகத்திற்க்குள் பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகரிக்க உதவும்.