கோடை காலத்தில் இதய பாதிப்பு: எப்படி தவிர்ப்பது?

மனிதனின் ஆரோக்கியம் பருவநிலைக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது. குளிர், மழை, வெயில் என அந்தந்த பருவ காலத்துக்கு தக்கவாறு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். அதிலும் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் இதய நோய்கள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடையை இன்னும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

மிகுந்த வெப்பம் கொண்ட கோடை காலத்தில் நமது உடல் வெப்பம் அதிகரிக்கும். இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த உடலையும் குளுமையாக வைத்திருக்க நமது இதயம் சற்று கடினமாக செயல்பட வேண்டியிருக்கிறது. இதயம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள், கோடை காலத்தில் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படக் கூடும்.

வெப்பம் அதிகரிக்கும் போது உடல் இயக்கம் மாறுபடுகிறது. உடலின் அனைத்து பாகங்களையும் குளுமையாக வைத்துக் கொள்ள ரத்தத்தை இதயம் அதிவேகமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இதனால், அதன் செயல்பாடு கடினமானதாக இருக்கிறது. உடலை முறையாக குளுமைப்படுத்தவில்லை என்றால் ஹீட் ஸ்டிரோக் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே இதயம் பலவீனமாக இருப்பவர்கள் அல்லது இதயம் பழுதடைந்து இருப்பவர்களுக்கு கோடை காலத்தில் ஆன்ஜைனா, ஹீட் ஸ்டிரோக், டீஹைட்ரேஷன், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வரக் கூடும்.

குளிர் காலத்தை விடவும் வெயில் காலத்தில் உடற்பயிற்சிகளை மிதமாக்கிக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் உடல் வெப்பம் காரணமாக ஏற்கனவே இதயம் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால், அதற்கு ஏற்ப ரத்தத்தை அதிவேகமாக இதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, உடற்பயிற்சிகளை சீராக செய்வதுடன், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். தீவிர உடற்பயிற்சியின் காரணமாக தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது. இது இதயத்திற்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது.

இதய நோயாளிகளுக்கு தண்ணீர் அருந்துவது குறித்து கட்டுப்பாடு இருக்கலாம். ஆனால், வெயில் காலத்தில் இதய நோய்களைத் தடுக்க உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். அதிகமாக தண்ணீர் அருந்தினால் மட்டுமே உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும். இதய துடிப்பை முறைப்படுத்தவும், கழிவுகளை வெளியேற்றவும் போதுமான தண்ணீர் அருந்துவது அவசியமானது.

காஃபி மற்றும் மதுவை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு பானங்களுமே உடலின் நீர்ச்சத்தை குறைக்க கூடியவை. இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, நீர்ச்சத்து குறைவது மிக ஆபத்தான விஷயம் ஆகும். இது மட்டுமல்லாமல் கோடையில் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, டீ, காஃபி மற்றும் மது போன்ற பானங்களை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம்.

காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள், சிறு தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். காரமான, எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.