கோவையில் கடந்த 3 மாதங்களில் 8 யானைகள் இறப்பு: விசாரணைக்குழு நாளை கோவை வருகை

யானைகள் இறப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு கோவையில் நாளை விசாரணை நடத்துகிறது.

கோவை மற்றும் பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதிகள் மற்றும் தமிழகம் முழுக்க உள்ள வனப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது.

இந்த இறப்பு குறித்து விசாரிக்க தமிழக அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முசம்மில் அப்பாஸ் இந்த குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவில் சென்னை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தின், வேலூர் திட்ட அதிகாரி பத்மா, மண்டல துணை வனப்பாதுகாவலர் சமர்தா மற்றும் ஓசை அமைப்பை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் தமிழகம் முழுக்க யானைகள் இறப்பு பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு யானைகள் இறப்புக்கான காரணம் குறித்தும் குறிப்பாக இளம் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 8 யானைகள் இறந்துள்ளன. எனவே கோவை மாவட்டத்தில் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்க இந்த குழுவினர் நாளை கோவைக்கு வர உள்ளனர்.