விரிவான நடவடிக்கையினால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே தீர்வு காணலாம் – டெட்ரோஸ் அதானம்

கொரோனாவுக்கு எதிரான விரிவான நடவடிக்கை எடுத்தால் உலக நாடுகள் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு செயற்குழுவின் 150 ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டெட்ரோஸ், கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நெருக்கடியான சூழலை தடுக்க புதிய தீர்வை உருவாக்க வேண்டும் என்று டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உலகம் இக்கட்டான தருணத்தில் உள்ளது என்றும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனாவின் கடுமையான கட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் நம்மிடம் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை ஒழிப்பதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருவதோடு, உலக நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருவதகவும் தெரிவித்தார்.

உலக நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம் என குறிப்பிட்ட அவர், கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் தொற்று முடியும் வரை காத்திருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.