புத்தாண்டு கொண்டாட தடை-ஆட்சியர் அறிவிப்பு

புத்தாண்டு அன்று பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022 – ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இதுபோன்ற இதர இடங்களில் இன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஓமைக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்று இரவு நடத்தப்படும் 2022 – ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என  தெரிவித்துள்ளார். கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 – ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.