மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக புகைப்படக் கண்காட்சி

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தினர் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக புகைப்படம் கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், எழுச்சிமிகு 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் இன்று முதல் 2ம் தேதி வரை சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இன்று இப்புகைப்படக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிக்கை தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அரிய புகைப்படங்களும், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் முதல் நாளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளால் சிலம்பம், கரகாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.