ஆற்றல் விருது வழங்கும் விழா

அமைச்சர் செந்தில் பாலாஜி களப்போராளியாக சிறப்பாக செயல்படுகிறார்

– நடிகர் சத்யராஜ் புகழாரம்

ஆற்றல் என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா 2021 கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், விவசாயி, துப்புறவு பணியாளர், செவிலியர், வீட்டு வேலை செய்பவர் என 74 தொழில்களின் அடிப்படையில் விருதுகளை வழங்கினர்.

முன்னதாக 103 வயதில் விவசாய பணி மேற்கொண்டு வரும் கோவை மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் மூதாட்டியிடம் விருதினை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே அவரது காலை தொட்டு வணங்கி நெகிழ்ச்சியூட்டினார். மேலும் இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சாதனை செல்வர் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு எனவும் அதனை வெளிப்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு புதிய தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார் முதலமைச்சர் என்றும் கோவையில் பத்து தொகுதிகளில் எதிர்கட்சிகள் வென்றாலும் 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதியாக எண்ணி திட்டங்களை கொடுத்து வருகிறார் என்றும் பெருமிதம் கொண்டார்.

இதை தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், தமிழகத்தில் சரியான துறைக்கு சரியான அமைச்சர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர் என்றார். மேலும் கலை போராளியாக இருப்பது சுலபம், ஆனால் கள போராளியாக இருப்பது சுலபமல்ல என்ற அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி களப்போராளியாக 25 ஆண்டுகளாக தொடர் வெற்றிகளை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.