ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் வன உயிரின பாதுகாவலர் ஆய்வு

கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த நவகரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி பெண் யானை உட்பட மூன்று யானைகள் உயிரிழந்தது. இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சுபைர், அகில் ஆகிய இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்பிணி பெண் யானை, மக்னா யானை, குட்டி பெண் யானை என 3 யானைகள் பலியான விவகாரம் வன ஆர்வலர்கள், பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ரயில் மோதி யானைகள் பலியாகும் இதுபோன்ற மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை பிற்பகல் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக முதன்மை தலைமை வனப பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபத்து நடந்த பகுதியில் உள்ள “ஏ” மற்றும் “பி” ஆகிய இரு ரயில் பாதைகளிலும் கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இரவு நேரத்தில் வன ஊழியர்களின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், கண்காணிப்பு பணியை தெர்மல் டிரோன் கேமராக்கள் மூலமும் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். விபத்து ஏற்பட்ட பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளையும் கேட்டறிந்தார்.