மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

கோவையில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் 2021 இறுதிப்போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், கோவையை சேர்ந்த மேதினி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய முதல் சுற்றை, 21 – 18 புள்ளி கணக்கிலும் இரண்டாவது சுற்றை, 21 – 9 என்ற புள்ளி கணக்கில் வென்று, முதல் இடத்தை பிடித்தார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், ஞானந்தா, ஸ்ரீநிதி நாராயணன் ஜோடி, – மேதினி, கனிஷ்கா ஜோடியை, 21 – 10,மற்றும் 21 – 19 என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடம் பிடித்தனர். இதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வர்ஷன், இரட்டையர் பிரிவில் தஞ்சாவூரை சேர்ந்த ஹரிஹரன், ரூபன் குமார் ஜோடி வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில், கோவையை சேர்ந்த நர்தனா, ஹரிஹரன் ஜோடி வென்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேஷன் செயலாளர் அருணாச்சலம் மற்றும் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, ராக்ஸ் பள்ளிக்கூடம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.