அண்ணா பிறந்தநாள்: கோவை சிறையில் இருந்து 99 கைதிகள் விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் 99 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று அவர்கள் வெளியே சென்றால், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத கைதிகள் மற்றும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் கோவை சிறையில் 132 கைதிகள் விடுதலை செய்யும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறை துறை அதிகாரிகள் கூறும்போது, மத்திய சிறையில் 10 ஆண்டு கடந்தவர்கள் கிட்டத்தட்ட 130 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நன்னடத்தை அடிப்படையில் உள்ள கைதிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் 99 பேர் விடுதலை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளது. இவர்களை விடுதலை செய்வதற்கான பணிகள் மற்றும் இது தொடர்பான நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இறுதி ஒப்புதல் பெற்று இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் கூறினர்.