கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66 க்குட்பட்ட மீனா எஸ்டேட் 6 வது கிராஸ் வீதியில் 24 மனி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் குழாய் அமைத்த பின்பு சாலை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.59க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, எம்.ஜி.ஆர் வீதியிலும் இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதையும், குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவை குறித்து பரிசோதனை செய்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சூயஸ் நிறுவன மேலாளர் முத்துபாபு ஆகியோர் உடனிருந்தனர்.