கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிரெடாய் அமைப்பு

கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தி அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு கிரெடாய் கோவை அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரம் பல துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவைக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பில் உள்ளது. மேலும், மெட்ரோ ரயில் போன்ற பல திட்டங்களும் திட்ட அளவில் உள்ளன. 2500 ச.மீ. அளவுக்கு மேற்பட்ட தனியார் கட்டிட அனுமதிக்கு சென்னைக்கு சென்று வர வேண்டிய நிலை இருக்கிறது. இதற்காக கிரெடாய் அமைப்பும் கோவை மக்களும் சென்னையைப் போன்று கோவையிலும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தை அமைத்துத் தருமாறு ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாநகரத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவற்காக கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, கிரெடாய் கோவை நிர்வாகிகள் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெவித்தனர். மேலும், சந்திப்போது உடனிருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, தொழில் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கும் அரசுத் துறை அதிகாரிகள் அனைவருக்கும் தங்கள் நன்றியைத் கிரெடாய் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இதன் மூலம் கோவை நகரம் மிக விரைவாக வளர்ச்சியடையும் என்றும் மாஸ்டர் பிளான், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சந்திப்பின் போது தமிழ்நாடு கிரெடாய் அமைப்பின் செயலர் அபிஷேக், கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலர் ராஜீவ் ராமசாமி, துணைச் செயலர் அரவிந்த் குமார், கோவை கிரெடாய் அமைப்பின் முன்னாள் தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் நிர்வாகி பாலசந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது உடனிருந்தனர்.