சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வடக்கு தொகுதி எம்.எல்.ஏ

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் அர்ஜூனன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றது முதல் அவர் தனது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி, இன்று கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம், சுண்டப்பாளையம், மகாராணி அவன்யு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்த அவர், விரைவில்  குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.