மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

கோவையை அடுத்த மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மகா தீப வழிபாடு நடைபெற்றது.

கொரோனா கால ஊரடங்கால் அரசு விதிமுறைப்படி பக்தர்கள் யாரும் அதிகம் அனுமதிக்காத நிலையில் அளவான பக்தர்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு, விழா துவங்கியது.

முன்னதாக பெரிய விநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மலையில் அமைந்துள்ள மூலவரான சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுடன் கோவிலை வலம் வந்து, நந்தி தேவருக்கு முன் உள்ள கம்பத்தில் ஆயிரம் மீட்டர் காடா துணியுடன் கூடிய திரியில், 18 டின் நெய் ஊற்றி, மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடிவார பகுதியிலுள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக நாயகி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தீபம் ஏற்றப்பட்டது. இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கும் படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.