மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மனுக்கள் பெறப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி கடந்த 30 ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், நடைபெற்று வந்த மக்கள் சபை நிகழ்ச்சி நிறைவடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவில்மேடு பகுதியில தொடங்கிய மக்கள் சபை நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, பி.என். புதூர், கே.கே. புதூர், வடவள்ளி, வீரகேரளம் மற்றும் பூசாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் மனுக்களை வாங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்:

தொடர்ந்து, நீண்ட ஆண்டுகளாக கோவை மக்களுக்கு தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளைக் கேட்க, கோவை மாநகராட்சியின் 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த 30 ந்தேதி தொடங்கிய இந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மனுக்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை 1,41,351 மனுக்கள் வரப்பட்டுள்ளது. மோசமான சாலைகளை புதுப்பிக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டியும், பாதாள சாக்கடை வசதி வேண்டியும், சீரான குடிநீர் வினியோகம் வேண்டியும் மனுக்கள் வரப்பட்டதாக கூறினார்.

இந்த மனுக்களை அந்தந்த துறை வாரியாக எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோவையின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று பணிகள் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த மக்கள் சபை நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் சர்மிளா, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் பையா ஆர்.கிருஷ்ணன், நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி, முன்னாள் மேயர்கள் கணபதி ராஜ்குமார், காலனி வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.