நீதிபதிகள் துணிச்சலோடும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் – தலைமை நீதிபதி என்.வி. ரமணா

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்.எல்.எஸ்.ஏ.) மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை 45 நாட்கள் நடத்தி சுமார் 70 கோடி மக்களைச் சந்தித்து அவர்களுடைய சட்ட உரிமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நிறைவுரையாற்றிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியதாவது:-

சாதாரண மனுதாரர்கள் பொருள் வளங்களாலும் கடும் உழைப்பாலும் அல்லல்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு தேவைப்படுவது விரைவான, அதிகச் செலவு இல்லாத நிவாரணம் தானே தவிர, பிரமாண்டமான நீதிமன்றக் கட்டிடங்களோ மிகுந்த கற்றறிந்த நல்ல உடையணிந்த வழக்கறிஞர்களோ அல்ல.

துயரப்படும் மக்கள் நன்றாக உடையணிந்த கற்றறிந்த வழக்கறிஞர்களையோ பெரிய நீதி மன்றக் கட்டிடங்களையோ எதிர்பார்ப்பதில்லை. சொத்துக்களை இழந்துவிடாமல் தங்கள் வேதனைகளிலிருந்து விடுபடவேண்டும் என்றே அவர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்காக நாம் எல்லோரும் இணைந்து உழைக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு நீதி வழங்கும் அமைப்புக்குள் இருக்கிறோம் என்ற உணர்வை அவர்களிடம் மேம்படுத்தவேண்டும்.

முதல் நடவடிக்கையாக நீதிபதிகள் துணிச்சலோடும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். தெளிவான, எளிமையான சொற்களில் சாதாரண மனுதாரர்களுக்கு புரியும் மொழியில் தங்கள் தீர்ப்பை எழுதவேண்டும். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.

நம்முடைய அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் பாதிப்புகளைச் சந்திக்கும்போது அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அடிப்படையில் முழுமையான சுதந்திரத்தோடும் தேவையான துணிச்சலோடும் ஆற்றலோடும் செயல்பட்டு நிலைத்திருக்க வேண்டும். அதில் நிலைத்திருப்பதே நம்முடைய மாசற்ற நடத்தையாகும். மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இதைத்தவிர வேறு வழியே இல்லை என உரையாற்றினார்.

 

Source: Kalaingnar Seithikal