ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘வெஸ் ஜெனக்ஸ்’ வருகைப்பதிவு கருவி கண்டுபிடிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் முதலாம் ஆண்டு வரவேற்பு விழா மற்றும் கல்லூரியின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையத்தின் புதிய கண்டுபிடிப்பான வெஸ் ஜெனக்ஸ் வருகைப் பதிவேடு கருவி அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி தலைமைத் தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை  ரூட்ஸ் குழுமத்தின் ஸ்ட்ராட்டஜிக் சோர்சிங்கின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கிய முக அங்கீகாரம் கொண்டு வருகை பதிவேற்ற கருவியினை அறிமுகம் செய்து வைத்தார். கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றவும், நோய் தொற்று பரவாமல் இருக்க  இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. வெஸ்ஜெனக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இக்கருவியை செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவர்களும் உருவாக்கி உள்ளனர்.

இக்கருவி வருகைப் பதிவேடு மட்டுமல்லாமல் ஒருவரின் உடல் தட்பவெட்பம், அவர் பணிபுரிகிற நிர்வாகம் மற்றும் அவரின் தகவல்களை இருக்கும் இடத்தில் கொண்டு மீட்டெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் இக்கருவியானது விமான நிலைய சோதனை, குற்றம் கண்டறிதல் என பன்முகத் தன்மை கொண்டதாக உருவாக்கியிருப்பது சிறப்பம்சம் ஆகும்.