என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டென்எக்ஸ் ஹெல்த் டெக்னாலஜிஸ் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் கோவை மருத்துவ மைய மற்றும் ஆராய்ச்சிக் கல்வி அறக்கட்டளையின் செயலர் மருத்துவர் தவமணி பழனிசாமி, என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் அகாடமி ஆஃப் கேரியர் டெவலப்மெண்ட்டின் இயக்குனர் மதுரா பழனிசாமி மற்றும் டென்எக்ஸ் ஹெல்த் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட். நிறுவனத்தின் இயக்குனர் அனந்த பத்மநாபன், என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரபா, உயிரி மருத்துவ பொறியியல் பிரிவு துறைத் தலைவர் சுமித்ரா  மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

செயலர் தவமணி பழனிசாமி சிறப்புரையாற்றுகையில், “நீங்கள் எத்தனை இலக்குகளை அடைந்தாலும், உங்கள் பார்வையை அதைவிட உயர்ந்த இலக்கின் மேல் வையுங்கள். பொறியியலாளர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல் அவசியம்” என்றும் குறிப்பிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் கல்லூரியின் முதல்வர் பிரபா எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் அனந்த பத்மநாபன் பேசுகையில்: மருத்துவக் கருவி மற்றும் உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவ வளர்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல தொழிற்பயிற்சிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரும் என்றும் இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தரமான பொறியியலாளர்களாக இப்போட்டி நிறைந்த உலகில் வெளிவர வேண்டும் என்றும் பேசினார்.