கோவை உட்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம் உட்பட 10 மாவட்டங்களுக்கு கனமழை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 21ம் தேதி ஆறு மாவட்டங்களுக்கும், 22ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது:

இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் மிக கன மழைக்கும், மேலும் பல மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

நாளை மறுநாள் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும்.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், நாளை மறுநாள் கன மழை பெய்யும்.

வரும், 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், கடலுார், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதில், மிக கன மழை என்பது, ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.