தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் கோவை முதலிடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அம்மா மினி கிளினிக் ஒரு குறுகிய கால திட்டம் என்றும் அங்கிருந்த பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் புதன்கிழமை கோவை வந்தார். அதன்படி, உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து மண்டல வாரியாக நடமாடும் தடுப்பூசி மையத்தையும், அரசு மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவையும் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உடல் நலம் தொடர்பான 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, “சற்றே குறைப்போம் திட்டம்” மூலம் திருவள்ளூரில் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணை குறைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

“உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்” என்ற திட்டம் மூலம் திருமண விழாக்கள், கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை தன்னார்வலர்கள் தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்க்கிறோம்.

“உபயோகித்த எண்ணை மறுபயன்பாடு” என்ற திட்டம் மூலம் பெரிய உணவகங்களில்ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைகளை பணம் கொடுத்து வாங்கி அதனை பயோ டீசலாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்த மூன்று திட்டங்களிலும் கோவை சிறப்பாக செயல்படுகிறது.

பிரேசில் நாட்டில் ஒரே மாதத்தில் 550 டன் உபயோகப்படுத்தப்பட்ட எண்ணை மறு சுழற்சி செய்து சாதனை படைத்துள்ளனர். அதனை முறியடிக்க கோவை அதிகாரிகள் இணைந்து முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்துவதில் கோவை தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 37 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.
மீதம் உள்ளவர்களுக்கி வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற 5 மெகா முகாம் மூலம் 5.51 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பிறந்து 28 நாட்களுக்குள்ளாக வெவ்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள்.

கோவையில் தனியார் பங்களிப்பு நிதி மூலம் 7 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம் அந்த திட்டம் முடிவடைந்து விட்டது. அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.