இணையதளம் வாயிலாக மத்திய அரசு பணிக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணியிட தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிப்பதாகவும், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியாருப்பதாவது:

மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையமான Staff Selection Commission மூலம்‌ தற்போது 10 ம்‌ வகுப்பு 12 ம்‌ வகுப்பு மற்றும்‌ பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான SSC-Phase-IX-Project Assistant பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும்‌ 3261 பணிக்காலியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்களின்‌ வயது வரம்பு குறைந்தபட்சம்‌ 18 முதல்‌ அதிகபட்சம்‌ 32 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்‌ வேண்டும்‌.

குறிப்பிட்ட பிரிவினருக்கு இத்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு தளர்வுகள்‌ உள்ளன. இம்மாதம் 25ம் தேதி வரை இத்தேர்விற்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம். தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ. 100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SC/ST பிரிவினர்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ முன்னாள்‌ இராணுவத்தினருக்கு கட்டணம்‌ இல்லை. மேலும்‌ விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில்‌ அறியலாம்‌. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்கள்‌ தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ உள்ள தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ மூலம்‌ கூகுள் மீட் செயலி வாயிலாக வாயிலாக சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌, பாடக்குறிப்புகள்‌, குழு விவாதம்‌, பாடவாரியாக வகுப்புகள்‌ ஆகியவை இணையதளம்‌ வாயிலாகவே பகிரப்படும்‌.

மேலும்‌ வாரந்தோறும்‌ மாதிரித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வில்‌ தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும்‌ செய்யப்படுகிறது. பயிற்சி வகுப்புகளைப்‌ பற்றி அறிய 94990 55938 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செயலி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

மேலும்‌ இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்படும். ஆகவே போட்டித்தேர்வு எழுதி மத்திய அரசில்‌ வேலைவாய்ப்பு பெற விரும்புவோர்‌ இவ்வாய்ப்பினைப்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.