உலக ஆர்த்ரைட்டிஸ் தினம் – அக் 12

முடக்கு வாதம் வாழ்க்கையை முடக்கி விடாது…!

வயதானவர்கள் ‘நடக்க முடியவில்லை மூட்டு வலிக்கிறது’ என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இதற்கு பின்னால் உள்ள காரணங்களாக நாம் பார்ப்பது வயது மூப்பை மட்டுமே. மூட்டுவலி என்று குறிப்பிடுவது வெறும் கால் முட்டிகள் மட்டுமல்ல. உடலில் எங்கெல்லாம் இரு எலும்புகள் இணையும் இடம் உள்ளதோ அங்கெல்லாம் ஆர்த்ரைடிஸ் எனப்படும் (மூட்டு நோய்கள்) வரும். இது மூட்டு இணைப்புக்களை சேதப்படுத்தும் பல நோய்களைக் குறிக்கிறது. பெரும்பாலான மக்களை அமைதியாக பாதிக்கும் நோய்களுள் ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு நோய்களும் ஒன்று.

அதிகப்படியான உடல் எடை இருக்கும்போது எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளின் இணைப்பை சேதமாக்குவதோடு இணைப்புகளின் இயற்கையான கட்டமைப்பையும் சேதப்படுத்துகிறது. சரியான உடல் எடை நிர்வாகம், முழங்கால்கள், மற்றும் இடுப்பு, கைகளில் வரக்கூடிய மூட்டு வலிகளைத் தடுக்கிறது.

வாழ்க்கை முறை மாற்ற காரணங்களால் ஒருவருக்கு மூட்டுவலி ஏற்படுவதுடன் உணவுப் பழக்கமும் இந்த பாதிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உப்பு, கரையக் கூடிய கொழுப்புகள் ஆகியவை சரியான விகிதத்தில் அடங்கிய ஆரோக்கிய உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் எல்லா வகையான மூட்டு நோய்களுக்கும் ஒரே காரணம் இருப்பதில்லை. மன அழுத்தத்தால் கூட மூட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக ஆர்த்ரைடிஸ் தினமான அக்டோபர் 12 அன்று ஆர்த்ரைடிஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் இணைந்து தி கோவை மெயில் வாயிலாக பகிர்ந்து கொண்ட கருத்துகளைக் காண்போம்.

ஆர்த்ரைட்டிஸ் வகையை அறிவது அவசியம்!

டாக்டர் மாதேஸ்வரன் மணி, வாத நோய் நிபுணர், ராயல் கேர் மருத்துவமனை

பெரும்பாலான மக்கள் உடலில் ஏற்படும் பிற கோளாறுகளுக்கு அக்கறை கொண்டு கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மூட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது குறைவே.

சில நேரங்களில் இந்த அலட்சியப் போக்கு ஜாயின்ட் பழுதடைவதற்கும் வழிவகுக்கும். மேலும் மூட்டு அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையும் ஏற்படலாம். மூட்டு தொடர்பான வியாதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டால் காலப்போக்கில் உடலில் உள்ள உள் உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பின்விளைவுகளும் ஏற்பட சாத்தியம் உண்டு.

சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும் இந்த வலி நீண்ட நாட்கள் தொடர்ந்து இருந்தால் இதற்கு ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (சரவாங்கி\முடக்கு வாதம்) என்று பெயர்.

இந்நோய் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப்பகுதி மற்றும் திசுக்களைப் பாதித்து அதன் செயல்பாடுகளைக் குறைத்து விடும். மேலும் இந்த முடக்கு வாதம் என்னும் ஆர்த்ரைடிஸ் உடலின் தாங்குதிறன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முரண்பாட்டால் உடலின் பிற உறுப்புகளை பாதிக்கும் நோய்.

மூட்டில் அடிபடாமல் மூட்டு எலும்புகளிலோ அல்லது சதைகளிலோ வலி ஏற்படுபவர்கள் முதலில் மூட்டு மற்றும் வாதநோய் நிபுணரை (ரூமட்டாலஜிஸ்ட்) சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மருத்துவ சிகிச்சையின் மூலமே எம்மாதிரியான வாதப் பிரச்சினை (ஆர்த்ரைட்டிஸ்) ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சிலவகையான ஆர்த்ரைட்டிஸை ஆரம்ப நிலையில் கண்டறியாத போது பின்நாட்களில் பல விளைவுகள் ஏற்படக் காரணமாவ தோடு உள் உறுப்புகளையும் பாதிக்கச் செய்யும். இதனால் இருதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சீறுநீரகம் போன்றவை பாதிப்படையவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எந்த வகையான ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவது அவசியம்.

மூட்டு வலி தொடர்பான ஆர்த்ரைட்டிஸ் வியாதிகள் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் குறைவாக உள்ளது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வேதேச அமைப்பு 1996 ம் ஆண்டில் இருந்தே அக்டோபர் 12ம் தேதி உலக ஆர்த்ரைட்டிஸ் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த தினமானது இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்கவும், அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது.

ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகள்

டாக்டர் நாகபிரபு, வாத நோய் நிபுணர், சக்தி சரவாங்கி மையம்

நம் உடம்பில், இரண்டு எலும்புகள் சேரும் சந்திப்பை இணைப்புகள் (Joints) என்கிறோம். இரண்டு எலும்புகளை ஒருங்கிணைக்க இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும், லிகமென்ட் எனப்படும் தசைநார்களும், குருத்தெலும்புகளும் உதவுகின்றன. கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையாக இருக்கக்கூடும்.

இணைப்பு எலும்புகளுக்கு இடையே மெத்தை போன்று உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குழைவான திசுக்களின் அமைப்பு நைந்துபோகும் போது குருத்தெலும்புகளும், மூட்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதால், வலி, வீக்கம் ஏற்பட்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு அதிக எடை, வயதாகுதல், பரம்பரை, லிகமென்ட் கிழிந்துபோதல், விபத்துகளில் அடிபடுதல், புகைபிடித்தல், தன்நோய் எதிர்ப்பு ஆற்றல் எனப் பல காரணங்கள் உள்ளன.

ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரையும் பாதிக்கிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே மூட்டுப்பகுதியைத் தாக்கி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவது ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். இதனை ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக் கூறலாம்.

ஆர்த்ரைட்டிஸ் (மூட்டுவாதம்) ஏற்படும் 90% பேருக்கு இணைப்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு, கைகளில் விறைப்புத் தன்மை (காலையில் எழும்போதோ, வேலை செய்யும் போதோ இந்த விறைப்பு ஏற்படும்) ஆகியவைதான் ஆர்த்ரைட்டிஸின் பொதுவான அறிகுறி. இந்த வலி மற்றும் இறுக்கம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கக்கூடும். சிலருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் வந்து போகலாம்.

நாட்பட்ட ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையைக் கவனிக்காமல் விட்டால், இணைப்புகளில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு சிலவகை ஆர்த்ரைட்டிஸ்கள் மூட்டு வலியோடு சேர்ந்து தோல் அலர்ஜி, காய்ச்சல், உள் உறுப்பு பாதிப்பு, இதயம், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், நரம்புகள் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கலாம்.

மூட்டுவலி வெறும் மூட்டு வாதத்தோடு (ஆர்த்ரைட்டிஸ்) நின்று விடாமல் ரத்த வாதம், சிரங்கு மூட்டு அலர்ஜி நோய் என பல வகைகளில் வரலாம். இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளை ஆரம்ப நிலையிலேயே எடுத்துக் கொண்டால் இதில் இருந்து விடுபடுவதற்க்கான வாய்ப்பு அதிகம்.

தண்டுவடத்தை பாதிக்கும் ‘ஸ்பான்டைலிடிஸ்’ !

டாக்டர் ராஜாமணி, தலைமை வாத நோய் நிபுணர், கே.எம்.சி.ஹெச்

முதுகெலும்பு தண்டுவடத்தை பாதிக்கக் கூடிய முடக்கு வாதத்திற்கு ஸ்பான்டைலிடிஸ் என்று பெயர். இந்நோய் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறது. ஆண்களில் லம்பார் ஸ்பயின் என்ற பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களில் இது முதுகெலும்பின் நடுப்பகுதியை பாதிக்கிறது. குழந்தைகளுக்கு கழுத்துப் பகுதியை பாதிக்கிறது.

இந்த நோய் பரம்பரை குறைபாட்டினால் வருவதோடு பிலிகி ஙி 27 என்ற மரபணு உள்ள ஒருவருக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் சொரியாசிஸ் தோல் நோய் கொண்ட வர்களுக்கும் முதுகெலும்பு தண்டுவடத்தை தாக்கும் முடக்கு வாதம் ஏற்படலாம். கண்ணில் ஏதேனும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்குவதற்க்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. மேற்கூறிய பாதிப்புகளோடு ஒருவருக்கு முதுகு வலி பிரச்சினையும் இருந்தால் அதை அசாதாரணமாக விட்டுவிடாமல் முடக்கு வாத பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

ஏதேனும் வேலை செய்யும்போது ஏற்படும் முதுகு வலிக்கும், முடக்கு வாதத்தினால் வரக்கூடிய முதுகு வலிக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு நிலையில் இருக்கும்போதே முதுகுப் பகுதியில் வலி தோன்றும். உதாரணமாக, காலையில் எழுவதில் சிரமம், தூங்கும் போது திரும்பிப் படுப்பதில் சிக்கல், படுக்கையை விட்டு எழ முடியாது இதுபோல உடல் ஓய்வு நிலையில் இருக்கும் போது இம்மாதிரியான வலி உணரப்படும்.

இது போன்ற வலி ஏற்படும் சமயங்களில் காலையில் 10 அல்லது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வெந்நீரில் குளிப்பதின் மூலம் வலியில் இருந்து சற்று விடுபடுவதை உணர முடியும்.

ஸ்பான்டைலிடிஸ் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும் ஒரு நிலை. சிகிச்சை எடுப்பதன் வாயிலாக நீண்ட கால சிக்கல்களைத் தடுக்கலாம். மேலும், சிகிச்சையின் மூலம் மூட்டு சேதத்தை குறைக்கலாம் மற்றும் வலியை எளிதாக்கலாம்

ஸ்பான்டைலிடிஸ் மூட்டு வாத நோயை எக்ஸ் ரே பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது. எம்ஆர் ஐ ஸ்கேன் மூலம் குறிப்பிட்ட பகுதி குறித்த விவரங்களைக் கேட்டறிந்தால் இந்த மூட்டு வாத நோய் இருப்பதைக் கண்டறியலாம். மேலும் இரத்த பரிசோதனையின் போது பிலிகி-ஙி27 மரபணு இருப்பதை உறுதிப் படுத்துவதன் மூலமும் கண்டறியலாம்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் கொள்ள அவசியமில்லை. இப்பொழுது மருத்துவத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களால் இதை குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

எலும்புத் தண்டு வடத்தில் வரக்கூடிய மூட்டு வாதத்திற்க்கான முக்கிய சிகிச்சையாக உடற்பயிற்சி உள்ளது. வலியை எளிதாக்க மற்றும் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றையும் செய்யலாம்.

இந்த நோய் ஏற்படுத்தக் கூடிய வலியை நீக்க இதற்காக எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் பிற மருந்துகளும் உதவுமே தவிர வியாதி குணமாகாது. வியாதி குணமாக தனி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரையின் மூலமாக பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பக்க விளைவு பயத்தினால் மாத்திரை உட்கொள்ளாமல் இருந்தால் நோயின் தன்மை தீவிரம் ஆகும்.

மாத்திரையினால் பக்க விளைவு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அறிய ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சையின் மூலம் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

ஆரம்ப நிலை சிகிக்சை அவசியம்!

டாக்டர் மகேஷ், வாத நோய் நிபுணர்

அங்கங்களை முடக்கிவிடுவதால் ’முடக்குவாதம்’ என்று சொல்லுவதோடு ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், சரவாங்கி என்றும் இதனைக் கூறுவார்கள். நூற்றில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் நிலையில் ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் ஏற்படுகிறது.

ஆரம்பகால முடக்கு வாதம் முதலில் கையில் இருக்கக் கூடிய சிறு எலும்பு இணைப்புகளைப் பாதிக்கிறது. குறிப்பாக கைகள் விரல்களை இணைக்கும் மூட்டு மற்றும் கால்விரல்கள் கால்களை இணைக்கும் மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் தொடர்ந்து வீக்கம் மற்றும் அசௌகரியத்தை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

இந்நோயினால் வெறும் மூட்டு வீக்கம் மட்டுமே ஏற்படும் என எண்ணுவது தவறு. நோய் முன்னேறும்போது, ​​அறிகுறிகள் பெரும்பாலும் மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால், முழங்கை, இடுப்பு மற்றும் தோள்களுக்கு பரவுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உடலின் இருபுறமும் ஒரே மூட்டுகளில் அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆறு வாரங்களுக்கு மேல் வலி தொடர்ந்து இருந்தால் வாதம் தொடர்பான மூட்டு வலி என்பதை பரிசோதனையில் கண்டறிய முடியும்.

பொதுவாக கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும். கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும். மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவை பாதிக்கப் பட்டு நீர் சேர்ந்து காணப்படும். மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும்.

முடக்கு வாதம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது பொதுவாக நடுத்தர வயதில் தொடங்குவதோடு மட்டுமல்லாமல் சிறு வயது முதல் 80 வரை உள்ளவர்களையும் பாதிக்கலாம். மேலும் 60 வயதை தாண்டியவர்களில் இந்த நோயை ‘லேட் ஆன்சைட் ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்’ என்கிறோம்.

சிலருக்கு முடக்குவாதம் என்பது மூட்டுகளை மட்டும் பாதிக்காது. பல உடல் உள் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த நிலை தோல், கண்கள், நுரையீரல், இருதயம், வயிற்றுப் பகுதி மற்றும் இரத்த நாளங்கள் உட்பட பல்வேறு வகையான உடல் அமைப்புகளையும் சேதப்படுத்தலாம்.

நவீன மருத்துவத்தில் வலி நிவாரணிகளும், முடக்குவாதத்தைத் தடுத்து நிறுத்துகிற steroids மருந்துகளும், இப்பொழுது biological agents என்று சொல்லக்கூடிய மருந்துகளும் இந்த நோய்க்கு பயன்பாட்டில் உள்ளன.

ஆண்களை விட பெண்களுக்கு முடக்கு வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு முடக்கு வாதம் இருந்தால், மற்றவருக்கும் நோய்க்கான ஆபத்து காரணி இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், சிகரெட் புகைத்தல் முடக்கு வாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படும் அபாயம் சற்று அதிகமாகவே இருக்கும்.

ஆர்த்ரைடிஸ் உள்ளவர்கள் நீண்ட காலமாக அதற்கு உண்டான சிகிச்சை எடுக்காமல் இருந்தால் மூட்டு இணைப்போடு சேர்ந்து பிற உறுப்புகளையும் பாதிக்க ஆரம்பிக்கும். முறையான சிகிச்சை எடுத்து வருபவர்களில் Disease Modifying Drugs மூலம் நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும் பாதிப்படைந்த மூட்டு எது என்பதைப் பொறுத்து தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

சொரியாட்டிக் ஆர்த்ரைட்டிஸ் பற்றி அறிவீர்களா?

டாக்டர் வேணுகோபால், வாத நோய் நிபுணர்

முடக்கு வாதத்தின் வகைகளில் மற்றொரு வகை சொரியாட்டிக் ஆர்த்ரைடிஸ். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு சருமத்தைத் தாக்கும் அளவுக்கு அதிகமாக செல்வதால் சொரியாஸிஸ் ஏற்படுகிறது. சொரியாசிஸ் உள்ள சிலருக்கு சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் ஏற்படலாம்,சொரியாசிஸ் என்பது தோலில் செதில் சிவப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.

ரூமாட்டிக் நோயில் பொதுவாக உடம்பு வலி, மூட்டு இணைப்புகளில் வலி, முதுகு வலி போன்றவை ஏற்படும் ஆனால் சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் முதலில் தோலை பாதிக்கிறது. பின்பு மூட்டு இணைப்புகளை பாதிக்கும். மேலும் விரல் நகங்களையும் பாதிப்பதோடு நகத்தின் அளவைச் சுருக்கி அதன் வடிவத்தையே மாற்றுகிறது. இதனால் விரல் முழுவதுமே வீக்கம் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு மூட்டு இணைப்புகள் பாதிப்படையாமல் இருக்கும். இந்நோய்க்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதோடு இது ஒரு நாள்பட்ட நோயாகும்.

இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் ஆரம்ப காலத்தில் அதிகளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதற்கான சிகிச்சை முறைகள் அதிகரித்துள்ளன. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வது அவசியம்.

சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் சிகிச்சையானது வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றின் அளவைப் பொறுத்து மாறுபடும். சொரியாடிக் ஆர்த்ரைடிஸின் தொடர்ச்சியான வீக்கம் மூட்டு சேதத்திற்கு வழிவகுக்கும். மிகவும் லேசான மூட்டுவலி உள்ளவர்களுக்கு மூட்டுகள் வலிக்கும்போது மட்டுமே சிகிச்சை தேவைப்படலாம் மற்றும் அவர்கள் நன்றாக உணரும்போது சிகிச்சையை நிறுத்தலாம். எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறியும் போதுதான் அந்நோய் இன்னும் தீவிரமடையாத வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.

தோல் சிவப்பு நிறமாக மாறுதல், மூட்டு வலி மற்றும் வீக்கம், நகம் பாதிப்பு, தலையில் அதிக பொடுகு காணப்பட்டால் இணையத்தில் அது குறித்த பதிலை தேடாமல், அதை அலட்சியம் செய்யாமல் வாத நோய் நிபுணரிடம் காண்பிக்க வேண்டும். இது போன்று ஆரம்ப நிலையிலே ஆலோசனை பெறுவது சிகிக்சை முறையை எளிமை ஆக்குவதோடு தீவிர சிகிச்சை முறைக்கு செல்வதையும் தடுக்கிறது.

இந்த நோய் ஏதேனும் நோய்க் கிருமி தாக்குதலினால் ஏற்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கு எழக்கூடும். ஆனால் நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு (Auto Immune category Disease) ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை தாக்கும்போது சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்நோய் ஏற்பட மற்றுமொரு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். இந்த மன அழுத்தம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை மாற்றி விடுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் வலி நிவாரணி தரப்படுகிறது. Convenˆional Diveave Modifying Dràgv மற்றும் Biological Diveave Modifying Dràgv என சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க இரண்டு முறைகள் உள்ளன. முதல் வகையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு குறைவு. இரண்டாம் வகையில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஒரு வாரத்தில் நிகழ்வதால் பெரும்பாலும் இந்நோய்க்கு இந்த சிகிச்சை முறைதான் வழங்கப்படுகிறது.

சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியுமே தவிர இதை முழுமையாக நூறு சதவீதம் குணப்படுத்த முடியாது.

ஃபைப்ரோமையால்ஜியா என்றால் என்ன?

டாக்டர் சிவகுமார், வாத நோய் நிபுணர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்(Ankylosing spondylitis), கௌட், சொரியாட்டிக் ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்கள் மூட்டுவலியை ஏற்படுத்தும். இந்நோய் உள்ளவர்களுக்கு கை, கால், மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் ஏற்படலாம். மேலும் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக நடக்க முடியாமலும், மற்ற வேலைகளில் ஈடுபட முடியாமலும் மூட்டு வலியுடன் இந்நோய் ஏற்படும்.

Fibromyalgia (சதைவாதம்) என்னும் நோய் பாதிப்பு தனியாகவோ அல்லது மற்ற ஆர்த்ரைடிஸ் நோயுடனோ ஏற்படலாம். இந்நோயில் உடல் முழுவதும் வலி மற்றும் அதிக சோர்வு ஏற்படும். சாதாரண தொடு உணர்வு கூட இந்நோய் உள்ளவர்களுக்கு வழியாக உணரப்படும். இதனால் மனச்சோர்வு, பதட்டம், தலைவலி, தூக்கமின்மை போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் ஆரோக்கியமான மற்றும் துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

வரும்முன் தடுக்கலாம்!

டாக்டர் கே.எஸ். ஜெயக்குமார், வாத நோய் நிபுணர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்கு வாத நோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கீல்வாதம் (கௌட்). இந்த கீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படும் ஒரு நோயாகும். கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக்களால் உருவாக்கப்பட்டு செல்களில் உள்ள NA மற்றும் RNA மரபணுக்களில் அடங்கியுள்ள மூலக்கூறுகள் பியூரின் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலில் இவை இரண்டு வகைகளில் அமைந்துள்ளன.

முதல் வகையானது மனித உடலில் உற்பத்தி செய்யப்பட்டு செல்களில் சேமிக்கப்பட்டு வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இரண்டாவது உணவுப்பொருள் மூலமாக உடலுக்குள் சென்று செரிமானத்துக்குள்ளாகி, வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுவது. இந்த பியூரின் தான் பல்வேறு கட்ட மாற்றங்களுக்கு பிறகு யூரிக் அமிலமாக கொடுக்கிறது. இந்த யூரிக் அமிலம் 90% உடலுக்குள்ளேயே மறு சுழற்சி முறையில் உறிஞ்சப்படும். எஞ்சியவை மலத்திலும், சிறுநீரிலும் வெளியேற்றும்.

இந்த யூரிக் அமிலம் அதிகமாகும் போது, அவை யூரிக் அமில உப்புக்கள் படிகங்களாக மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களில் படியும். யூரிக் ஆசிட் என்னும் உப்பு உடலில் அதிகரிப்பதால் ‘கௌட்’ (Gout) எனப்படும் கீல் வாதநோய் உண்டாகிறது. ஆறு வாரங்களுக்கு மேல் எலும்புகள் இணையும் பகுதிகளில் வலி இருந்தால், அது கீல் வாதநோயாக இருக்கலாம்.

கீல்வாதம் என்பது முழங்கால் மூட்டில் உண்டாகும் பிரச்சினை, சிலருக்கு இடுப்பு, தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளை பாதிக்கும். கீல்வாதத்தில் மூட்டின் இரு பக்கமும் உள்ள எலும்புகளின் எலாஸ்டிக் போன்ற குருத்தெலும்பு உறை சேதமடையும்.

கீல்வாதத்தால் எலும்புகள் நேருக்கு நேராக உராய்ந்து வலி, மூட்டு இறுக்கம் ஏற்பட்டு நாள்பட மூட்டு அசைவுகள் குறையத் தொடங்கும். இதனால் மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலவீனப்படும். வாழ்க்கை முறை மாற்றம், அதிக உடல் எடை, அசைவ உணவுகளை அதிகம் உண்ணுதல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுதல், தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற காரணங்களாலும் கீல்வாதம் ஏற்படலாம். இந்த நோய் தீவிரமாக மாறுவதற்குள் கண்டறிந்தால் சரி செய்வதற்கு வாய்ப்பு அதிகம்.

கீல்வாதம் ஏற்பட்ட பாதத்தில் கடுமையான, திடீரென்று ஏற்படும், எதிர்பாராத, எரிச்சலுடைய வலியும் அதேபோன்று வீக்கம், சிவந்து போதல், வெப்ப உணர்வு, மற்றும் விறைப்பு ஆகியவையும் தோன்றும். குறிப்பிட்ட சில வயதினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு பரம்பரை காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். மேலும் பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்திரைகளினாலும் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாவதாலும் கீல்வாதம் ஏற்படலாம்.

இதற்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. வலி ஏற்படக்கூடிய சமயத்தில் அதை சரி செய்யக் கூடிய வகையில் ஆன்டி அழற்சி மாத்திரை கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் வலி குறையும். மேலும் வலி தொடர்ந்து இருந்தால் ஸ்டீராய்டு மருந்துகள் சிறிய கால அளவில் கொடுக்கலாம். இரண்டாவதாக, ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகளவில் சேராமல் இருப்பதற்கான சிகிச்சை முறை கண்காணிப்பினாலும் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கீல்வாதம் நோய் வந்த பின் மேற்கொள்ளும் வழிமுறைகளை விட, இந்நோய் வரும் முன்னே தடுப்பதே சிறந்தது.