வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம்: வனத்துறை அமைச்சர் உறுதி

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம், மாற்று திறனாளிகள் அலுவலகம், சமூக நல அலுவலகம், வேளான்துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 35,57,000 ரூபாய்கான காசோலைகளை 21 பயனாளிகளுக்கு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக வெகுவாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சநிலையில் இருந்தபோது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதின் காரணமாக வெகுவாக கட்டுபடுத்தபட்டு தற்போது 200 பேருக்கும் கீழ் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் உள்ளதாக தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக பல லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர் என்றவர் ரத்தக கொதிப்பு,சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளானவர்களும் பலனடைந்துள்ளனர் என கூறினார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தி எல்லாப் பகுதிகளிலுமே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வனத்துறையில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டதாகவும் தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.